Last Updated : 28 Mar, 2015 10:19 AM

 

Published : 28 Mar 2015 10:19 AM
Last Updated : 28 Mar 2015 10:19 AM

ராஜினாமா செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம்: பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் குற்றச்சாட்டு

உட்கட்சி ஜனநாயகத்தை கட்டுப்படுத்துகிறார் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவர்களான பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் நேற்று குற்றம் சாட்டினர்.

இதனால் ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது.

பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், “நாங்கள் எந்தப் பிரச்சினையை எழுப்பினாலும் அதை, கேஜ்ரிவாலின் தலைமையை எதிர்ப்பதாகவும், அவரை தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அகற்ற முயற்சிப்பதாகவும் சித்தரிக்கப்படுகிறது. கேஜ்ரிவால் எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்று பதவியை ராஜினாமா செய்யுமாறும் நாங்கள் நிர்பந்திக்கப்படுகிறோம்” என்றனர்.

யோகேந்திர யாதவ் கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சி ஒரு புரட்சியில் இருந்து தோன்றியது. இக்கட்சி மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நாட்டின் பிற கட்சிகளை விட ஆம் ஆத்மி மாறுபட்டது. ஆனால், இதற்கு மாறாக ஆம் ஆத்மி கட்சியில் கடந்த சில வாரங்களாக நிறைய நடந்துள்ளது.

தொண்டர்களின் கருத்துகளுக்கு கட்சியில் வாய்ப்பு தரப்படவேண்டும், கட்சியில் வெளிப்படைத்தன்மை வேண்டும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் என்னை அமர்த்துமாறு நான் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையல்ல. உட்கட்சி ஜனநாயகத்தை கேஜ்ரிவால் கட்டுப்படுத்துகிறார்.

கட்சியின் இணையதளத்தில் இருந்து கட்சிக் கோட்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பிரதி எங்களிடம் உள்ளது” என்றார்.

பிரசாந்த் பூஷன் கூறும்போது, “கட்சியின் நலனுக்கான விஷயங்களை பேச விரும்புகிறேன், சந்திக்க நேரம் ஒதுக்குங்கள் என கேஜ்ரிவாலுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தேன். ஆனால், 11 நாட்கள் ஆகியும் இதற்கு பதில் இல்லை. எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் நாங்கள் ராஜினாமா செய்கிறோம்” என்றார்.

பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் விவகாரம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x