Last Updated : 30 Mar, 2015 02:22 PM

 

Published : 30 Mar 2015 02:22 PM
Last Updated : 30 Mar 2015 02:22 PM

வெள்ள சீற்றத்தில் இருந்து காஷ்மீர் மக்களை பாதுகாக்க மத்திய அரசின் நடவடிக்கை என்ன?- ஒமர் கேள்வி

வெள்ளச் சீற்றத்திலிருந்து காஷ்மீர் மக்களை பாதுகாக்க மத்த்திய அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீரில் ஜீலம் நதியில் வெள்ளம் அபாய அளவைக் கடந்த பாய்ந்து வருகிறது. இதனால், அங்கு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவருமான ஒமர் அப்துல்லா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜீலம் நதி தனது கோரத் தாண்டவத்தை நடத்தி 7 மாதங்களே ஆகின்றன. அதற்குள் காஷ்மீர் மக்கள் மற்றொரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வு அளிக்க பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. இருந்தாலும் அரசு நடவடிக்கை என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

சட்டப்பேரவையில் பேசும்போது, "மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலைமையை சமாளிக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அரசு விளக்க வேண்டும்.

அதேபோல், மாநில அரசுக்கு உதவ மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்பதையும் தெரிவிக்க வேண்டும். கடந்த முறை வெள்ளம் பாதித்தபோது, மக்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், பாஜகவோ மாநிலத் தேர்தலில் தனது கவனத்தை செலுத்தியது. எனவே, இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x