Last Updated : 18 Mar, 2015 07:31 PM

 

Published : 18 Mar 2015 07:31 PM
Last Updated : 18 Mar 2015 07:31 PM

தேர்வு வாரிய ஊழல்: ம.பி. முதல்வருக்கு எதிராக ஆதாரம் அளித்தது காங்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில்முறை வல்லுநர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு தலையிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அவர்கள் ம.பி. முதல்வருக்கு எதிரான ஆதாரத்தையும் வழங்கினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல், திக்விஜய் சிங், கமல் நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்தனர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

மத்தியப் பிரதேசத்தில் தொழில்முறை வல்லுநர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு மிகவும் பெரியது. இது தொடர்பான ஆதாரம் அடங்கிய சி.டி.யை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிதின் மொஹிந்திராவின் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கிலிருந்த அசல் (ஒரிஜினல்) எக்ஸெல்-ஷீட்டையும் வழங்கி உள்ளோம். இந்த ஹார்ட் டிஸ்கிலிருந்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஒரிஜினலை வழங்கி உள்ளோம்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஊழலில் தானும் ஈடுபடமாட்டேன் மற்றவர்கள் ஈடுபடவும் அனுமதிக்கமாட்டேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த முறைகேட்டில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸார், அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x