Last Updated : 08 Mar, 2015 11:09 AM

 

Published : 08 Mar 2015 11:09 AM
Last Updated : 08 Mar 2015 11:09 AM

பலாத்கார கைதி படுகொலையால் பதற்றம்: நாகாலாந்தில் இயல்பு நிலை திரும்புகிறது - 144 தடை உத்தரவு நீடிக்கிறது

நாகாலாந்தின் திமாப்பூரில் சிறைக் கைதி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதையொட்டிய பதற்றத்துக்குப் பின்னர், அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. எனினும் 144 தடை உத்தரவு நீடிக்கிறது.

திமாப்பூரில் 20 வயது நாகா பெண் ஒருவரை பலமுறை பலாத்காரம் செய்ததாக, 35 வயது நபர் ஒருவர் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் திமாப்பூர் மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில், பலாத்காரத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 5-ம் தேதி திமாப்பூர் சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திடீரென சிறைக்குள் புகுந்த மக்கள், குற்றவாளியை வெளியில் இழுத்து வந்து அடித்து உதைத்தனர். இதில் அந்நபர் பலியானார். கும்பலை கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார்.

இந்தக் கலவரத்தால் முக்கிய வர்த்தக நகரான திமாப்பூர் முடங்கியது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் திமாப்பூரில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு, இயல்புநிலை திரும்பிவருகிறது. எனினும் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளதாக கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் அகிடோ சீமா நேற்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, ‘‘திமாப்பூரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைக்க 11 கம்பெனி போலீஸார் மற்றும் 3 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

திமாப்பூரில் வாகனப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. எனினும், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதுகுறித்து அகிடோ சீமா கூறும்போது, ‘‘கைதியை சிறையில் இருந்து வெளியில் இழுத்துச் சென்று கொலை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கைதியை அடித்து உதைத்து கொல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஆதாரம் உள்ளது. அதனால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x