

பெங்களூரு, சதாசிவ நகரில் உள்ள காவேரி ஜங்ஷன் பகுதியில் போக்குவரத்தில் சிக்கிய ஆம்புலன்சுக்கு வழி விட செயல்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரை பெங்களூரு போலீஸ் தாக்கியது பரபரப்பானது.
ஓய்வு பெற்ற அந்த ராணுவ வீரர் பெயர் நாகப்பா என்று தெரிகிறது.
எலஹங்க்காவில் உள்ள நவசேதன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ரத்தம் எடுத்துச் சென்று கொண்டிருந்தது. அப்போது காவேரி ஜங்ஷன் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆம்புலன்ஸ் நகர முடியாமல் தேங்கிப்போனது.
இதனைக் கண்ட அந்த ராணுவ வீரர் நாகப்பா, சாலையில் உள்ள கயிறால் போடப்பட்ட டிவைடரை அகற்றினார். இதன் மூலம் ஆம்புலன்சுக்கு வழிவிட முயற்சி செய்தார்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ரங்கண்ணா, ராணுவ வீரர் நாகப்பாவை நடுச் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைத்துள்ளார்.
இந்த விவகாரம் சதாசிவ நகர் மூத்த காவல் அதிகாரி பார்வைக்குக் கொண்டு செல்லப்பட, அவர் விசாரித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.