Last Updated : 17 Mar, 2015 06:22 PM

 

Published : 17 Mar 2015 06:22 PM
Last Updated : 17 Mar 2015 06:22 PM

ஐஏஎஸ் அதிகாரி ரவி மரணம்: கொதிப்புடன் நீதி கேட்கும் இணையவாசிகள்

பெங்களூருவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மரணத்துக்கு நீதி கேட்டு ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணையவாசிகள் கொதிப்பான பதிவுகளை பதிந்து வருகின்றனர். இந்திய அளவில் நிமிடத்துக்கு நூறு என ஆயிரக்கணக்கான கருத்துகள் பதியப்படுகின்றன.

பெங்களூருவில் வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி, தனது நேர்மையான செயல்பாடுகளால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தனது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

காலையில் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இருப்பதாக கூறிச் சென்ற தனது கணவன், வீட்டில் மின் விசிறியில் தொங்கிய நிலையில் மரணித்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார் ரவியின் மனைவி.

டி.கே.ரவி சாதாரண ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல. 2013-ல் கோலார் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றது முதல் மணல் கடத்தல், சாலைப் பணிகள் முறைகேடுகள், புறம்போக்கு நில அபகரிப்புகள், ஏரிகள் ஆக்கிரமிப்புகள், வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் எனப் பல விவகாரங்களில் திறம்பட செயல்பட்டவர். | வாசிக்க ->ஐஏஎஸ் அதிகாரி ரவி: கர்நாடகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் |

அதிகாரத்தில் காலூன்றி நின்ற அரசியல் புள்ளிகள் மீதும் இவர் நடவடிக்கை எடுக்கத் தவறியதில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், உதிரிக் கட்சிகள் என யாரிடமும் பாரபட்சமின்றி தனது கடமையை மட்டும் செய்து வந்துள்ளார். இவர் தனது 5 வருட பணி காலங்களில் மொத்தம் 28 முறை இடம் மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான், மர்மமான முறையில் அவர் மரணம் அடைந்தார். முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அவரது வீட்டில் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் இல்லை. இந்த மரணம் சந்தேகத்துக்குரியது என அவரது உறவினர்களும் சொல்கின்றனர்.

மணல் கடத்தலுக்கு எதிராக திறம்பட செயல்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவிக்கு மக்களின் ஆதரவு ஓங்கியுள்ளது. மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி கோலார் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில், முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

கடமை தவறாத அதிகாரியின் அகால மரணம் கர்நாடக மக்களை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியிருக்கிறது. வழக்கமான அதிகாரியாக மட்டுமின்றி, மக்களின் தோழனாகத் திகழ்ந்த டி.கே.ரவிக்கு ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன், சுப்பிரமணியன் சுவாமி, சாக்‌ஷி மகாராஜ், மோகன் பகவத் முதலானவர்களின் சர்ச்சைப் பேச்சுகள் குறித்த கருத்துகள், நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் தொடர்பான அரட்டைப் பதிவுகளில் அதிகம் மூழ்கியிருந்த ட்விட்டர் சமூகம் இன்று நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மரணத்துக்கு நீதிகேட்டு கொதித்தெழுந்துள்ளது.

> #DKRaviஎன்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டில் முதன்மையாக்கி குவிக்கப்பட்டுவரும் கொந்தளிப்புப் பதிவுகளில் சில:

அனில் சலாகெரி (‏@AnillChalageri): ரவி இறந்ததாக தெரிந்த ஒரு மணி நேரத்தில், சம்பவ இடத்துக்கு சென்று 'இது தற்கொலை' என்று கண்டுபிடித்து மீடியாவில் பேசுபவர்களை முதலில் விசாரிக்க வேண்டும்.

மஞ்சுநாத் சம்பத் (‏@manjusamp): டி.எல்.எஃப். விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த டாக்டர் கெம்கா 21 ஆண்டுகளில் 43 முறை இடம் மாற்றப்பட்டார். ரவி 6 ஆண்டுகளில் 28 முறை வெவ்வெறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள். இது தற்கொலையா?

ராதிகா (‏@RpG): மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. உள்துறை அமைச்சருக்கு சொந்தமான நிறுவனத்தில் அதிகாரி ரவி தலைமையில் சோதனை நடந்ததாக பிரபல பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.

கிரண் குமார் (‏@KiranKS): டி.கே. ரவி சிறந்த அதிகாரி மட்டுமல்ல. ஏழை எளிய மக்களுக்கு நண்பரும்கூட. அவரது பணிகளுக்கு இடையே ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை அவர் தவறியதில்லை. அவரது குடும்பம் மட்டும் அல்ல... கோலார் மக்களே அவரை இழந்து வாடுகின்றனர்.

ஆனந்த் விஜயப்பன் (‏@vajapeyam): ரவியின் மரணம் குறித்து பேசப்பட்டபோது, சில கர்நாடக அமைச்சர்கள் சட்டப்பேரவையில் தூங்கிவிட்டார்களாமே?

ஜக்கி ‏(@Jag_HM): ஆர்.எஸ்.எஸ். / பாஜக பல்வேறு சமூகங்களின் மீது கல்வீசி வருகின்றது. ஆனால் காங்கிரஸ், அமைதியாக அதிகாரிகளை பறித்து வருகிறது. யாருமே ஒழுங்கில்லை நண்பர்களே.

ஈகிள் ஐ (‏@cbinewton): 4 மாதங்களில் தான் எடுத்த நடவடிக்கைகளில் 130 கோடி அளவில் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களிடமிருந்து அரசுக்கு வருமானத்தை பெற்றுத் தந்துள்ளார். சி.பி.ஐ-க்கு உத்தரவிடுங்கள் மிஸ்டர் நரேந்திர மோடி.

முகமயில் (‏@priyas): நேர்மையின் கடைசி மிச்சங்கள் என்றும் அழிக்கப்படுவதில்லை. #DKRavi என்பதும் ஓர் விதை தான்.

விஸ்வேஷ்வர் பட் (‏@VishweshwarBhat): சி.ஐ.டி. விசாரணை தேவையில்லை. மக்கள் அதுக்கும் மேலான விசாரணையை எதிர்ப்பார்க்கின்றனர். கண்துடைப்பு நாடகம் நடத்தாதீர்கள். காவல்துறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளதால், இந்த மரணத்தை சி.பி.ஐ. விசாரிப்பதே சிறந்தது.

பிரவீன் ராஜூ (‏@raju777_praveen): RIP #DKRavi சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும்வரை எங்களது போராட்டம் ஓயப்போவதில்லை. சி.பி.ஐ-க்கு மாற்ற சித்தாரமய்யா அரசு ஏன் அஞ்சுகிறது? மனிதராக இருக்கும் நீங்கள் மனிதனாக நடந்துகொள்ளுங்கள்.

இதேபோல், ஃபேஸ்புக்கிலும் > #DKRavi என்ற ஹேஷ்டேக் மூலம் இணையவாசிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x