Published : 13 Mar 2015 09:33 AM
Last Updated : 13 Mar 2015 09:33 AM

நாடாளுமன்ற துளிகள்: தத்தெடுப்பு எளிமைப்படுத்தப்படும்

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் பதிலளித்தனர். சில எம்.பி.க்கள் கோரிக்கைகளை எழுப்பினர் அவற்றில் சில பின்வருமாறு:

தத்தெடுப்பு எளிமைப்படுத்தப்படும்

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி:

குழந்தைகளைத் தத்தெடுப்பதற்காக தற்போதுள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்தும் விதத்திலும், தாமதத்தைக் களையும் விதத்திலும் விதிமுறைகளை மாற்றியமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தத்தெடுப்பு நடைமுறைகளை இணைய தளம் மூலம் மேற்கொள்வதற்கும், தத்தெடுக்கவுள்ள உள்நாட்டு பெற்றோர் குறித்த ஆய்வுக்கான காலகட்டத்தை 2 மாதங்களிலிருந்து ஒரு மாதமாகக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2012-13-ம் ஆண்டில் 5,002 குழந்தைகளும், 2013-14-ம் ஆண்டில் 4,354 குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆர்பிஹெச் திட்டம் வழக்கில் இல்லை

ஊராட்சிகள் துறை இணையமைச்சர் நிஹால் சந்த்:

கிராமப்புற தொழில் மையங்கள் திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்திலேயே கைவிடப்பட்டுவிட்டது.

சிபிசி சட்டத்தில் திருத்தம்

சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா:

சிவில் வழக்குகளைக் கையாளும் சிபிசி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்த பரிந்துரைகள், மாநில அரசுகளின் கருத்துக் கேட்புக்குப் பின் மத்திய அரசால் ஆய்வு செய்யப்படும்.

உணவுக் கலப்படம்

சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா:

உணவுக் கலப்படம் தொடர்பாக மத்திய அரசு மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டுள்ளது. இதுதொடர்பான விதிமுறைகளில் தேவைப்படும் மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். உணவு ஆய்வாளர்களுக்கு சிறந்த பயிற்சி, ஆய்வகங்களை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது.

சுத்தமான காற்று பிறப்புரிமை

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:

சுத்தமான காற்று என்பது பிறப்புரிமை. டெல்லியில் மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதே சமயத்தில், காற்றின் தூய்மையை கண்காணிக்க வெளிநாடுகளின் உதவியைப் பெறும் திட்டம் இல்லை.

வாக்களிப்பது கட்டாயம் இல்லை

சட்ட அமைச்சர் சதானந்த கவுடா:

வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை. பொதுத்தேர்தல்களில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் திட்டம் தற்போது ஏதும் இல்லை.

தேசிய மீனவர் ஆணையம்

திமுக எம்.பி. கனிமொழி:

மீனவர்களில் 67சதவீதம்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கின்றனர். அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். சுமார் 1.5 கோடி மீனவர்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் வகையில் தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். 2013-14-ம் நிதியாண்டில் மீனவர் நலத்திட்டங்களுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி எதுவும் அளிக்கவில்லை.

வாக்களித்ததற்கு ரசீது

ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சரத் யாதவ்:

மளிகைக் கடைகளில் சிறுபொருட்கள் வாங்கினால் கூட ரசீது கொடுக்கிறார்கள். வாக்கு என்பது அரசமைப்பின் இயந்திரம் போன்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான புகார்களை நாம் கேட்கிறோம். ஒரு ரசீது கிடைக்கச் செய்வதன் மூலம் தான் அளித்த வாக்கு பற்றிய உத்தரவாதத்தை வாக்காளர் பெற முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ரசீது அளிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x