Last Updated : 18 Mar, 2015 05:14 PM

 

Published : 18 Mar 2015 05:14 PM
Last Updated : 18 Mar 2015 05:14 PM

பிரச்சினைகளுக்கு முடிவை ஏற்படுத்துங்கள்: கேஜ்ரிவாலுக்கு பிரசாந்த் பூஷண் மீண்டும் கடிதம்

ஆம்ஆத்மியில் நிலவும் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அதிருப்தி உறுப்பினராக இருக்கும் பிரசாந்த் பூஷண், அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

அவர் இந்த முறை எழுதியுள்ள கடிதம் குறித்து அவர் குறிப்பிடுகையில், "ஆம்ஆத்மி அரசியல் தேசிய செயற்குழு கூட்டத்திலிருந்து விலகுவதாக நான் கூறவில்லை. ஆனால் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியது உண்மை.

கட்சியில் நீண்ட நாளாக நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்றே கூறினேன். பிரச்சினைகள் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அது குறித்து விளக்கமாக அவருக்கு எழுதியுள்ளேன்" என்றார்.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சியில் அனைத்து அதிகாரங்களும் அர்விந்த் கேஜ்ரிவாலிடமே இருப்பதாக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு பிரசாந்த் பூஷன் கடிதம் எழுதியிருந்தார்.

இதனால் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, தொடர் உட்கட்சி பூசலை அடுத்து, பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் அரசியல் குழுவிலிருந்து விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் கட்சியிலிருந்து விலக தயாராகவே இருந்ததாகவும், இதற்கு அர்விந்த் ஆதரவு விசுவாசிகளே காரணம் என்ற மாறுபட்ட கருத்தை அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் மயாங்க் காந்தி கூறி சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x