விவசாயிகளின் நிலங்களை அபகரித்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்: நடிகர் பவன் கல்யாண் எச்சரிக்கை

விவசாயிகளின் நிலங்களை அபகரித்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்: நடிகர் பவன் கல்யாண் எச்சரிக்கை
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்திற்காக புதிய தலைநகரம் அமைக்க கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் தூளூரு, மங்கலகிரி, தாடேபல்லி கூடம் ஆகிய 3 மண்டலங்களில் 29 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த கிராமங்களில் 1,010 ஏக்கரில் புதிய தலைநகரம் அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இப் பகுதியில் நில சேகரிப்பு பணிகள் நடைபெற்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலை நகருக்கான பூமி பூஜை வரும் மே மாதம் நடைபெற உள்ளது.

இதனிடையே தலைநகர் அமைய உள்ள பகுதியில் சில விவசாயிகள், தங்களுக்கு விருப்பமில்லாமலேயே விவசாய நிலங்களை ஆந்திர அரசு அபகரிக்கிறது என குற்றம் சாட்டினர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இந்தப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதனிடையே ஜனசேனா கட்சி யின் தலைவரும் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான பவன் கல்யாண் இப்பிரச்சினையில் தலையிட்டு தங்களது விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டு மென அப்பகுதி விவசாயிகள் ஊர்வலம் நடத்தி தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக் கையை ஏற்ற பவன் கல்யாண், நேற்று தலைநகர் அமைய உள்ள குண்டூர் மாவட்டம் தூளூரு, உண்டவல்லி, எர்ர பாளையம், பேத்தபுடி ஆகிய கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதில் பவன் கல்யாண் கூறியது: தலைநகருக்காக விவசாயிகள் சந்தோஷமாக நிலங்களை வழங்கினால் அது தவறில்லை. ஆனால் அவர்களிடம் வலுக்கட்டாயமாக நிலங்களை அபகரித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவேன். தேவைப்பட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தயார்.

தலைநகருக்காக 8 முதல் 10 ஆயிரம் ஏக்கர் நிலமே போதும் என நினைக்கிறேன். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவைதானா? இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in