Last Updated : 26 Mar, 2015 09:10 AM

 

Published : 26 Mar 2015 09:10 AM
Last Updated : 26 Mar 2015 09:10 AM

சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் நகராட்சி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு: வெங்கய்ய நாயுடு யோசனை

நாட்டில் உள்ள நகராட்சிகளை மேம்படுத்துவதற்காக சரக்கு மற்றும் சேவை வரி வருமானத்தில் ஒரு பகுதியை நகராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நிதிச் சுதந்திரம், வளங்களை அணுகுவதற்கான வாய்ப்பு, வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது உலகிலேயே இந்திய நகராட்சிகள்தான் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.

ஒவ்வொரு நகராட்சியின் வருமானம் ரூ.1,430 என்பதாக இருக்க, செலவுகளோ ரூ.6,030 ஆக இருக்கின்றன என்று 'மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிட்யூட்' தெரிவித்துள்ளது.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு நகராட்சிகளுக்குத் தொடர்ந்து நிதி கிடைக்கும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி வருமானத்தின் ஒரு பகுதியை நகராட்சி மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டு வருகிறோம். இதுகுறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடனும் கலந்தாலோசித்து வருகிறோம்.

இதற்கிடையே, மின் ஆளுமை, ஒருங்கிணைந்த நீண்ட கால நகர மேம்பாட்டுத் திட்டங்கள், ஆற்றல் மற்றும் நீர் தணிக்கை, நகராட்சிக் கழிவுகளை அறிவியல் முறைப்படி அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நகராட்சிகளைச் சீரமைக்க அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

தவிர, 'ஸ்மார்ட் நகரங்கள்' அமைப்பதற்கும், பெரிய உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதில் 'ஸ்மார்ட் நகரங்கள்' பெரும் பங்கு வகிக்கும். எனவே, அவற்றுக்கு அதிகளவில் மனித மற்றும் உள்கட்டமைப்பு வளங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x