Published : 15 Mar 2015 11:07 AM
Last Updated : 15 Mar 2015 11:07 AM

திருப்பதி கோயிலில் நாவிதர்களுக்கு தட்டுப்பாடு

திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடனாக தினமும் ஏராளமான பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். திருமலையில் உள்ள கல்யாண கட்டா மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி அருகில் தலைமுடி காணிக்கை செலுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதில் தேவஸ்தானம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நாவிதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர ஸ்ரீவாரி சேவகர்கள் இலவசமாக பக்தர்களுக்கு இந்த சேவையை செய்து வருகின்றனர். இதில் ஆண்கள் 671 பேரும், பெண்கள் 207 பேரும் ஈடுபட்டுள்ளனர். சாதாரண நாட்களில், அதாவது திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நாவிதர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் விடுமுறையின்றி நாவிதர்கள் பணிக்கு வரவேண்டுமென தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இருப்பினும் சில நேரங்களில் சுவாமியை தரிசனம் செய்யும் நேரத்தைவிட முடி காணிக்கை செலுத்த அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு நாவிதர், ஒரு மணி நேரத்தில் 10 முதல் 12 பக்தர்களுக்கு சேவை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று திருமலையில் உள்ள முடி காணிக்கை செலுத்தும் இடமான கல்யாண கட்டா பகுதியில் முடி காணிக்கை செலுத்துவதற்காக சுமார் 1 கி.மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருந்தனர்.

சுமார் 5 மணி நேரம் வரை காத்திருந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x