இணையத்தில் செல்வாக்கு மிகுந்தோர் பட்டியலில் மோடிக்கு சிறப்பிடம்: டைம்

இணையத்தில் செல்வாக்கு மிகுந்தோர் பட்டியலில் மோடிக்கு சிறப்பிடம்: டைம்
Updated on
1 min read

டைம் நாளிதழ் வெளியிட்டுள்ள சர்வதேச அளவில் இணையத்தில் 'செல்வாக்கு மிகுந்தவர்கள்' பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பிடம் வகித்துள்ளார்.

உலக அளவில் 30 பேர் கொண்ட இந்தப் பட்டியலில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங், பாடகர்கள் டெய்லர் ஸ்விஃப்ட், பியான்ஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

பிரபலங்களில் சமூக வலைத்தளங்களை எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள், வலைப்பக்கத்துக்கான டிராபிக் என்னவாக இருக்கிறது, அந்தப் பிரபலங்கள் எவ்வாறாக செய்திகளுக்கான கருவாக இருக்கின்றனர் போன்ற கூறுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

டைம் இதழ் மேற்கொண்ட ஆய்வின்படி பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைப்பக்கங்களில் 3.8 கோடி பேர் பின்தொடர்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், நரேந்திர மோடி இந்தியா மக்களிடம் தன் கருத்துகளை எடுத்துச் செல்ல சமூக வலைத்தளங்களை எளிய வழியாக கருதுகிறார் என்றும் கூறியுள்ளது.

கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய வருகை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை முதலில் தனது ட்விட்டர் பக்கத்திலேயே வெளியிட்டார் என்பதையும் டைம் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in