Published : 21 Feb 2015 11:19 AM
Last Updated : 21 Feb 2015 11:19 AM
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) கருத்தரங்கு கூடம் ஒன்றுக்கு முன்னாள் தூதரக அதிகாரியும் இப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ஜி.பார்த்தசாரதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விழா இப்பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசும்போது, “ஐ.நா.வில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக ஜி.பார்த்தசாரதி பணியாற்றும்போது, அவருடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது. அவர் ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிறகு அவருடன் எனக்கு நெருக்கம் அதிகமானது.
ஜேஎன்யு-வின் வளர்ச்சியில் அவர் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். அவரது கடும் உழைப்பினாலேயே புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக ஜேஎன்யு வளர்ந்துள்ளது.
இதுபோல் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் சுயாட்சி பெற்ற ஆர்.ஐ.எஸ். என்ற சிந்தனையாளர் மன்றத்தை உருவாக்கியதில் பார்த்தசாரதியின் பங்கு அளப்பரியது. காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவை பார்த்தசாரதி சந்தித்துப் பேசி, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் நீடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து, அவரை ஏற்றுக்கொள்ளச் செய்ததை மறக்க முடியாது. அந்தக் கால வரலாற்றில் ஜி.பார்த்தசாரதியின் பங்கு போற்றுதலுடன் பதிவு செய்யப்படும் என்று நம்புகிறேன்” என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஷ்யாம் சரண் மற்றும் அறிஞர்கள் பலரும் ஜி.பார்த்தசாரதிக்கு புகழாரம் சூட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT