Published : 02 Feb 2015 03:26 PM
Last Updated : 02 Feb 2015 03:26 PM
மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்து துரதிர்ஷ்டவசமானது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லியில் நடந்த விழாவில் பேசியபோது, "மத சார்புகளால் பிரிந்து கிடக்க அனுமதி அளிக்காதவரை இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத சுதந்திரம் குறித்த ஒபாமாவின் கருத்துகள் துரதிர்ஷ்டவசமானவை. பாஜக மதசார்பின்மையில் நம்பிக்கை கொண்டுள்ளது.
கர் வாப்ஸி போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்திய தேசத்தில் நிச்சயம் வரவேற்பு இருக்காது. எந்தச் சூழலிலும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் தனி மனிதர்களுக்கோ, அமைப்புகளுக்கோ அரசு ஆதரவுக் கரம் நீட்டாது. மக்களை மதவாத அடிப்படையில் பிரித்தாள முற்படும் அனைத்து முயற்சிகளை முறியடிப்பதிலும் அரசு உறுதியாக இருக்கிறது.
அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேண வேண்டும், அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும், தீவிரவாதத்தை ஒடுக்கி உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றே விரும்புகிறது" என்றார்.
டெல்லி தேர்தல்:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கூறுகையில், தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக, டெல்லியில் பெரும்பான்மை ஆட்சி அமைக்கும். வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT