Published : 04 Feb 2015 08:33 AM
Last Updated : 04 Feb 2015 08:33 AM
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் ரூ.3 கோடியுடன் கடந்த மாதம் தலைமறைவான கூட்டுறவு வங்கி மேலாளர், சாக்கு மூட்டைகளுடன் நேற்று முன்தினம் போலீஸில் சரணடைந்தார்.
இதுகுறித்து ஹர்தா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரேம்பாபு சர்மா கூறியதாவது:
ஹர்தா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கிளை ஒன்றில் சுதர்சன் ஜோஷி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தக் கிளையில் கடந்த ஜனவரி 22-ம் தேதி அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தியதில் ரூ.2.77 கோடி குறைவாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ஜோஷி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
12 நாட்களுக்குப் பிறகு ஹர்தா நகர காவல் நிலையத்தில் 4 சாக்கு மூட்டைகளுடன் ஜோஷி நேற்று முன்தினம் சரணடைந்தார். அந்த சாக்கு மூட்டைகளை திறந்து பார்த்த தில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து, பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் 2 மணி நேரமாக எண்ணப்பட்டன.
இதில் ரூ.2 கோடியே 76 லட்சத்து 74 ஆயிரத்து 500 இருந்தது. இதில் ரூ.500 நோட்டுகள் 11, ரூ.1,000 நோட்டு 1 ஆகியவை கள்ள நோட்டு. மீண்டும் இந்த ரூபாய் நோட்டுகளை சரிபார்ப்பதற்காக ரிசர்வ் வங்கியின் உதவியை கோர உள்ளோம்.
ஜோஷி கொண்டுவந்த சாக்கு மூட்டையில், வங்கிக் கிளையில் காணாமல் போன தொகையைவிட ரூ.26,150 குறைவாக இருந்தது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 406 (மோசடி), 408 (நம்பிக்கை துரோகம்), 410 (கொள்ளை) மற்றும் 120 (பி) (குற்ற சதி) ஆகியவற்றின் கீழ் ஜோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோஷி நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்படுவார். அப்போது 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT