Published : 11 Feb 2015 08:55 AM
Last Updated : 11 Feb 2015 08:55 AM

டெல்லியில் பலத்த அடி: எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பாஜகவுக்கு கிடைக்கவில்லை

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் மட்டுமே கிடைத்த நிலையில், அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரே பஸ்ஸில் பயணம் செய்யலாம் என பாஜக கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தது.

இப்போது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரு பைக்கிலேயே சட்டப்பேரவைக்கு பயணம் செய்ய முடியும். ஆனாலும் 3 பேர் செல்ல அனுமதி இல்லாத காரணத்தால், இவர்கள் ஒரே ஆட்டோவில் பயணம் செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

டெல்லி தேர்தலில் ரோஹிணி தொகுதியில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மாநில தலைவர் விஜேந்தர் குப்தா, ஆம் ஆத்மி வேட்பாளர் சி.எல்.குப்தாவை சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தத் தொகுதியில் கடந்த 2013 தேர்தலைத் தவிர மற்ற தேர்தல்களில் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது.

விஸ்வாஸ் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஓம் பிரகாஷ் சர்மா, ஆம் ஆத்மி வேட்பாளர் அதுல் குப்தாவை சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

முஸ்தபாபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் பிரதான், காங்கிரஸ் கட்சியின் இப்போதைய எம்எல்ஏ ஹசன் அகமதுவை சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

விஜேந்தர் குப்தாவைத் தவிர எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. எனவே, அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி அரசை அனுபவமுள்ளவர் என்ற அடிப்படையில் இவர்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டதைவிட, டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்க்கட்சி அந்தஸ்தோ எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x