Published : 16 Feb 2015 08:19 AM
Last Updated : 16 Feb 2015 08:19 AM

இலங்கை அதிபர் இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

அதிபர் ராஜபக்ச ஆட்சியின் போது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. இலங்கையில் இரண்டு துறைமுகங் கள், ஒரு விமான நிலையம் ஆகிய வற்றில் சீனா முதலீடு செய்துள்ளது. மேலும் சீனாவின் உதவியுடன் தெற்காசியாவின் மிகப்பெரிய சரக்கு முனையமும் அங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் சீனாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கை கடல் பகுதிக்கு வந்தன. இதுகுறித்து இந்திய தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார்.

நான்கு நாள் பயணம்

அதிபராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக சிறிசேனா நேற்று இரவு டெல்லி வந்தார். நான்கு நாட்கள் அவர் இந்தியாவில் தங்கியிருக்கிறார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, சுகாதாரத் துறை அமைச்சர் ரஜிதா சேனாரத்னா, மறுகுடியமர்வுத் துறை அமைச்சர் சுவாமிநாதன், மின், எரிசக்தி துறை அமைச்சர் சம்பிக ரணவாகா, நீதித் துறை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் அடங்கிய குழுவும் டெல்லி வந்துள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிபர் சிறிசேனாவுக்கு இன்று சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது கலாச்சாரம், வேளாண்மை தொடர்பாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதியில் நாளை வழிபாடு

17-ம் தேதி பிஹாரில் உள்ள புத்த கயாவில் சிறிசேனா சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார். அங்கிருந்து திருப்பதி செல்லும் அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். புதன்கிழமை காலை திருப்பதியில் இருந்து கொழும்பு புறப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x