கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே, மனைவி மீது துப்பாக்கிச்சூடு

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே, மனைவி மீது துப்பாக்கிச்சூடு
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பி.பன்சாரே தனது மனைவியுடன் நடைப் பயணம் மேற்கொண்டபோது அவர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கோவிந்த பி.பன்சாரே (82) தனது மனைவி உமாவுடன் இன்று காலை 8 மணி அளவில் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நடைப் பயணத்தில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரது மீதும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்ம நபர்கள் பன்சாரேவின் மிக அருகில் நின்று 4 முறை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

பலத்த காயமடைந்த கோவிந்த் பன்சாரே மற்றும் அவரது மனைவியும் அஸ்தார் ஆதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் பன்சாரேவின் கழுத்துப் பகுதியில் ஒரு குண்டு உரசிச் சென்றதாகவும் கையில் ஒரு குண்டு பாய்ந்ததாகவும், அவரது மனைவி மீது ஒரு குண்டு பாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பன்சாரேவின் நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் அவரது மனைவி உமா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு மாநில உள்துறை அமைச்சர் ராம் ஷிண்டே கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், துப்பாக்கிச்சூட்டின் பின்னணி இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in