Published : 16 Feb 2015 09:54 AM
Last Updated : 16 Feb 2015 09:54 AM

ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்எஸ் புரா பகுதியில் உள்ள தாவி பகுதியில், போர் நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் படை வீரர்கள் நேற்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

சிறு ஆயுதங்களைக் கொண்டு முற்பகல் 11 மணி அளவில் பாகிஸ்தான் தரப்பில் 3 சுற்றுகள் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டன. எனினும், இந்தியா தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று எல்லை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்படும் 2-வது அத்துமீறிய தாக்குதல் இது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜம்மு மாவட்டத்தின் ஆர்எஸ் புரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சர்வதேச எல்லையையொட்டி பாதுகாப்பு சாவடி அமைந்துள்ள நொவாபிண்ட் பகுதியில் பாகிஸ்தான் படை வீரர்கள் பீரங்கி தாக்குதல் நடத்தினர். அந்த குண்டுகள் வெடித்த தில் இந்திய பகுதிக்குள் யாருக்கும் காயமோ சேதமோ ஏற்படவில்லை.

இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக நேற்று முன்தினம் இரவு சுமார் 4 பேர் ஊடுருவ முயன்றனர். இந்திய பகுதிக்குள் அவர்கள் வந்தபோது அங்கே பணியில் இருந்த எல்லை பாதுகாப்புப்படையினர் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதே வேளையில் பாகிஸ்தான் எல்லை சாவடியிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த மோதலின்போது ஊடுருவ வந்த நபர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு தப்பி ஓடினர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி.கோஸ்வாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x