Published : 01 Feb 2015 11:01 AM
Last Updated : 01 Feb 2015 11:01 AM
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் ஒன்று குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் நேற்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானி உயிர் தப்பினார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீரஜ் பட்குஜார் கூறும்போது, “ஜாம்நகர் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில், ரசூல்நகர் பகுதியில் உள்ள பெட் என்ற கிராமத்தில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள குட்டையில் விமானி குதித்ததால் உயிர் தப்பினார். எனினும் இதில் காயமடைந்த அவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு போலீஸாரும், தீயணைப்பு படையினரும் உடனே அனுப்பி வைக்கப்பட்டனர்” என்றார்.
இதே பகுதியில் பெட், சம்ராத் ஆகிய கிராமங்களிடையே 2012-ல் விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டு நொறுங்கி விழுந்தன. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விமானப் படையின் மிக் 27 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்நிலையில் ஒரே வாரத்தில் மீண்டும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT