

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் 8 மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு, தாயகம் திரும்பினார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
அலெக்ஸிஸ் பிரேம் குமார், விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் அந்தோணி, "கடவுள் என்னை காப்பாற்றியிருக்கிறார். அவருக்கு என் முதற்கண் நன்றி. பிரதமர் நரேந்திர மோடியால் தான் நான் தாயகம் திரும்பியிருக்கிறேன்" என்றார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடி நேரடி தலையீட்டின் பேரில், பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் விடுதலையாகியுள்ளார். பாதிரியார் விடுதலை தொடர்பாக அரசு சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளது. இருப்பினும் பாதிரியாரை விடுதலை செய்ய தீவிரவாதிகள் பினைத்தொகை ஏதும் கேட்டனரா போன்ற தகவல்களை அரசு தெரிவிக்கவில்லை" என கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழகத் தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ் தவ பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் (47) கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி தீவிரவாதிகளால் ஹெராத் பகுதியில் கடத்தப்பட்டார்.
அவரை பத்திரமாக மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து பாதிரியாரை மீட்க ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், தமிழக பாதிரி யார் மீட்கப்பட்டது பற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, "ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமாரிடம் பேசினேன். அவர் நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறார். 8 மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பும் தகவல், அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.