Published : 22 Feb 2015 02:05 PM
Last Updated : 22 Feb 2015 02:05 PM

தெலங்கானா முதல்வரை சந்தித்தார் ஜெயப்பிரதா - தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைகிறாரா?

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவை நடிகை ஜெயப்பிரதா நேற்று காலை சந்தித்தார். பிரபல நடிகை ஜெயப்பிரதா, கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அவர், கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியி லிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

அந்த கட்சியிலிருந்து விலகிய அவர், கடந்த மக்களவைத் தேர்தலின்போது, அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் இணைந்தார். அந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் விரைவில் தெலுங்கு தேசம் அல்லது தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றில் இணையலாம் என எதிர்ப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவை ஹைதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஜெயப்பிரதா சந்தித்தார். அப்போது அவர் தனது சகோதரி மகள் திருமண அழைப்பிதழை வழங்கி, திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த சந்திப்பின்போது, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைவது குறித்து முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திய தாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x