சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை: பயணிகளை மிரட்டி நகை, பணம் பறிப்பு

சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை: பயணிகளை மிரட்டி நகை, பணம் பறிப்பு
Updated on
1 min read

சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை செவ்வாய்கிழமை அதிகாலை ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே நிறுத்திய முகமூடி கொள்ளையர்கள் பயணிகளை மிரட்டி நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். பாதிக்கப்பட்ட பயணிகள் ரயில்வே போலீஸில் புகார் செய்துள்ளனர். இரவு நேரத்தில் ரயிலில் பாதுகாவல் இல்லாததே கொள்ளை நடக்க காரணம் என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் பலமுறை ரயில்களில் கொள்ளை நடைபெற்றுள்ளது. போலீஸார் மற்றும் ரயில்வே துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் இது போன்ற கொள்ளைகளை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. இப்போது நடந்துள்ள ரயில் கொள்ளையிலும், முகமூடி கொள்ளையர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளது தெரிகிறது.

கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பாக பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி கார்டுகள் குண்டூரில் பணி முடித்து இறங்கி விட்டனர். அதன் பின்னரே கொள்ளையர்கள் திட்டமிட்டபடி தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.திங்கள்கிழமை இரவு சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் ஆந்திர மாநிலம் குண்டூர் அடுத்துள்ள தும்மலசெருவு என்கிற இடத்தில் சென்றபோது அபாய சங்கிலி பிடித்து இழுத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து முகமூடி அணிந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல், எஸ் 5 முதல் எஸ் 12 வரை உள்ள ரயில் பெட்டிகளில், தூங்கி கொண்டிருந்த பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த நகை, பணம் , பர்ஸ், ஹான்ட் பேக், செல்போன்கள், போன்றவற்றை கொள்ளையடித்துவிட்டு ரயில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டனர். சுமார் 30 நிமிடங்கள் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் செகந்திராபாத் ரயில் நிலைய போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். பிரியங்கா, துர்கா லக்ஷ்மி, ஸ்வர்ணா, ஸ்ரீவாணி, அனுசங்கர், பாத்திமா, வெங்கட் சுதீர் உட்பட 8 பயணிகள் மட்டுமே புகார் செய்துள்ளனர். இவர்களது புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ் 12 பெட்டியில் 24 -வது இருக்கையில் இருந்த பயணி ஒருவர் கொள்ளை சம்பவம் நடந்த பின்னர் காணவில்லை என்பதால் அவருக்கும் இந்த கொள்ளை சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட குண்டூர் ரயில்வே எஸ்.பி. ஷியாம் பிரசாத், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால், கொள்ளையர்களை சுட்டு கொல்லவும் தயங்க மாட்டோம் எனவும், ரயிலில் பாதுகாப்பை பலப்படுத்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in