Published : 10 Feb 2015 04:21 PM
Last Updated : 10 Feb 2015 04:21 PM
டெல்லியில் ஆம் ஆத்மி அடைந்திருக்கும் வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வியைக் குறிப்பதாக அன்னா ஹசாரே குறிப்பிடுவதை ஒப்புக்கொண்டாக வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. தொடர்ந்து பெரும்பான்மையான இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளதால் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
ஆம் ஆத்மி டெல்லியில் அடைந்திருக்கும் பெரும்பான்மை வெற்றிக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு டெல்லியில் அடைந்துள்ள தோல்வி சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தல் வெற்றி கிடைத்த சில மாதங்களில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி அடைந்திருக்கும் வெற்றிக்கு பாஜக-வுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா பாராட்டு தெரிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் தலைவர் உத்தாவ் தாக்ரே கூறும்போது, "ஜனநாயகத்தின் மிகப் பெரிய நாள் இன்று. இது வெறும் அலை அல்ல, மிகப் பெரிய சுனாமிதான் டெல்லியில் வீசியுள்ளது.
ஆம் ஆத்மிக்கு மீண்டும் ஒரு முறை மக்கள் வாய்ப்பளித்துள்ளார்கள். மிகப் பெரிய வாய்ப்பு இது. இதனை அவர்கள் மீண்டும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
மக்கள் விரக்தியில் உள்ளனர். டெல்லியில் ஆட்சி நடத்தி வருபவர்களுக்கு மக்கள் மக்கள் அளித்துள்ள எச்சரிக்கைதான் ஆம் ஆத்மியின் வெற்றி. அன்னா ஹசாரே கூறியதைபோல ஆம் ஆத்மியின் வெற்றி கிரண் பேடி அடைந்த தோல்வியல்ல. இது பிரதமர் நரேந்திர மோடி அடைந்த தோல்வி.
வெற்றி பெற்றிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இப்போதும் அவர் ராஜினாமா செய்வதாக பேசக்கூடாது. அவரிடம் வைத்துள்ள நம்பிக்கையை வாக்குகள் மூலம் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை அவர் வீணாக்கக்கூடாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT