Published : 28 Feb 2015 07:12 PM
Last Updated : 28 Feb 2015 07:12 PM

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18, டீசல் ரூ.3.09 அதிகரிப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில், இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இம்மாதம் 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை சிறிது அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்துகொள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்து வருவதால், இந்தியச் சந்தையிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 3-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.25 குறைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் முதல் பெட்ரோல் விலை 10 முறையும், கடந்த அக்டோபர் முதல் டீசல் விலை 6 முறையும் குறைக்கப்பட்டது.

இதையடுத்து, இம்மாதம் 15-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசுகளும் உயர்த்தப்பட்டன.

சென்னையில் எவ்வளவு?

இப்போது, இந்த ஆண்டின் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாறுபடும்.

இதனால், சென்னையில் ரூ.59.85 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரிகள் உட்பட ரூ.3.46 அதிகரித்து ரூ.63.31-க்கு விற்கப்படும். ரூ.49.58 ஆக இருந்த டீசல் விலை வரிகள் உட்பட ரூ.3.34 உயர்ந்து ரூ.52.92க்கு விற்கப்படும். இந்த விலை உயர்வு நள்ளிரவு அமலுக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x