Published : 04 Feb 2015 09:46 AM
Last Updated : 04 Feb 2015 09:46 AM

பவானி சிங்கை நீக்கக் கோரிய திமுகவின் மனு வேறு அமர்வுக்கு மாற்றம்: ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பரபரப்பு விவாதம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுகவின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற‌ தலைமை நீதிபதி நேற்று வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை யில் பவானி சிங் அரசு வழக்கறிஞ ராக ஆஜராகி வருகிறார்.அவரை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கடந்த 28-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு(ரிட்) தாக்கல் செய்தார். இம்மனு தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா, அசோக் பி.ஹின்ச்சிகேரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் வாதிடும்போது, “அரசியல் தலையீடு காரணமாக ஜெயலலிதா மீதான வழக்கு கடந்த 2004-ம் ஆண்டு கர்நாடகத்துக்கு மாற்றப் பட்டது. இவ்வழக்கில் நீதிபதி, அரசு வழக்கறிஞர் ஆகியோரை கர்நாடக அரசு நியமிக்க வேண்டும். தமிழக அரசு தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால் சட்டத்துக்கு புறம்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இவ்வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமித்துள்ளது” என்றார்.

பவானி சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டோமி செபாஸ்டியன், “ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு புகாரை விசாரித்து வழக்கு தொடர்ந்தது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தான்.பவானி சிங் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கித் தந்துள்ளார். அதனால் மேல்முறையீட்டிலும் அவரே தொடர்ந்து ஆஜராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆணை பிறப்பித்துள்ளது” என்றார்.

தீவிரம் காட்டிய டி.ஹெச்.வஹேலா

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா, “இவ்வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டபோது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. வரம்பு மீறி, பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்த‌து ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எல்.என்.ராவ், “குற்றவியல் நடைமுறைச்சட்டம் 24(8)-ம் பிரிவின்படி அரசு வழக்கறிஞரை நியமிக்க புகார் தாரரான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் இருக்கிறது.கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக அரசு பவானி சிங் நியமனத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது. அப்போது உச்ச நீதிமன்றம் மீண்டும் அவரை நியமித்தது.

எனவே மேல்முறையீட்டிலும் தொடர்ந்து வாதிட பவானிசிங்குக்கு உரிமை இருக்கிறது. அதனால் இவ்வழக்கின் புகார்தாரரான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவரை மீண்டும் நியமித்துள்ளது. இதில் குற்றவியல் நடைமுறை விதிகள் மீறப்படவில்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “குற்றவியல் நடைமுறைச்சட்டம் 24(1)-ம் பிரிவின்படி வழக்கு நடக்கும் மாநிலத்துக்கே அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் இருக்கிறது. தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை.அதுவும் குற்றவாளியான ஜெயலலிதா தனக்கு எதிராக வாதிடும் அரசு வழக்கறிஞரை எப்படி நியமிக்க முடியும்?” என்றார்.

அதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எல்.என்.ராவ், “'பவானி சிங் தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல.கர்நாடகத்தை சேர்ந்த அவர் இவ்வழக்கில் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு பெற்றுள்ளார். இவ்வழக்கின் விசாரணை தொடங்கி 20 நாட்கள் முடிந்துவிட்டது. இதில் ஜெயலலிதா தரப்பு வாதம் முடிந்துவிட்டது. இந்நிலையில் புதிய வழக்கறிஞரை நியமித்தால் காலதாமதம் ஏற்படும்” என்றார்.

கர்நாடக அரசு ஆட்சேபம்

இதையடுத்து கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் பேசும்போது, “கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குக்கு கர்நாடக அரசுதான் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்.தமிழக அரசு நியமித்ததை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றத் தயாராக இருக்கிறது” என்றார்.

பவானிசிங்கின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டோமி செபாஸ்டியன், “சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வந்த பவானி சிங் க‌டந்த 26.8.2013 அன்று கர்நாடக அரசால் நீக்க‌ப்பட்டார். இதில் தலைமை நீதிபதியான நீங்கள் அவரை நீக்கப் பரிந்துரை செய்துள்ளீர்கள். பவானி சிங் நீக்கத்தில் அங்கம் வகித்த நீங்கள் இவ்வழக்கை விசாரிக்க கூடாது. வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

வேறு அமர்வுக்கு மாற்றம்

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா, பவானி சிங்கை நீக்கக் கோரிய திமுகவின் மனுவை வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டார். அந்த அமர்வில் இடம்பெறும் நீதிபதிகள், விசாரணை நாள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x