Last Updated : 01 Feb, 2015 11:07 AM

 

Published : 01 Feb 2015 11:07 AM
Last Updated : 01 Feb 2015 11:07 AM

தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: ரூ.41 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு பலாத்காரத்தை மறக்க வேண்டும் - பிஹாரில் பஞ்சாயத்து போட்ட உத்தரவு

ரூ.41 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்யப்பட்டதை மறந்துவிடும்படி திருமணமான தலித் பெண்ணை பஞ்சாயத்துத் தலைவர்கள் மிரட்டி உள்ளனர். இதனால் பிஹாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிஹார் மாநிலம், கடிஹார் மாவட்டம், கோதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் ரவிதாஸ். இவர், இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி உதவி பெற ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்று கூறி, திருமணமான பெண்ணை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கடந்த மாதம் வரவழைத்துள்ளார். மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த அந்தப்பெண் அங்கு சென்றபோது, அவரை பிரகாஷ் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டி உள்ளார்.

எனினும், பாதிக்கப்பட்ட பெண் பஞ்சாயத்தில் புகார் கூறியுள்ளார். அதை விசாரித்த பஞ்சாயத்தார், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.41 ஆயிரத்தை பிரகாஷ் தரவேண்டும். அதை பெற்றுக்கொண்டு பலாத்காரத்தை அந்தப் பெண் மறந்துவிட வேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளனர். ஆனால், உள்ளூரில் பெரும் தாதாவாக விளங்கும் பிரகாஷ், பணத்தை தர மறுத்துள்ளார்.

இதுதொடர்பான தகராறில் அந்தப் பெண்ணின் கணவரையும் பிரகாஷ் தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கடிஹார் போலீஸ் கண்காணிப்பாளர் ஷத்ரநீல் சிங்கை சந்தித்து அந்தப் பெண் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி சுனில்குமார் கூறும்போது, ‘‘போலீஸ் கண்காணிப்பாளர் உத்தரவின்படி விசாரணை நடத்தி பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட நரேஷ் ரவிதாஸ் என்பவரை கைது செய்துள்ளோம். தலைமறைவான முக்கிய குற்றவாளி பிரகாஷ் ரவிதாஸை தேடி வருகிறோம்’’ என்றார்.

கடந்த ஆண்டு கிஷண்கஞ்ச் மாவட்டத்தில், சகோதரர்கள் 4 பேரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அச்சிறுமி கருவுற்றாள். 7 மாத கர்ப்பிணியான சிறுமியின் புகாரை விசாரித்த பஞ்சாயத்தார், ‘குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு கருவைக் கலைத்து விட வேண்டும்’ என்று தீர்ப்பளித்தனர். அதன் பின் சிறுமி அளித்த புகாரின்படி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருத்தி பலாத்காரம் செய்யப்பட்டு, கருவுற்றாள். அப்போது, ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு கருவைக் கலைக்கும்படி பஞ்சாயத்தார் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x