Published : 03 Feb 2015 09:16 PM
Last Updated : 03 Feb 2015 09:16 PM

சமூக வலைதள விமர்சனங்கள் குற்றமல்ல: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

‘சமூக வலைதளங்களில் வெளி யிடப்படும் விமர்சனங்கள், கருத் துகளை குற்றமாக கருத முடி யாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் குறித்து ‘காமன் காஸ்’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான ஊழியர்கள் போராட்டத்தின் போது, பிரதமர் அலுவலகத்தை விமர்சித்து கருத்து வெளியிட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனா போராட்டத்தின்போது அதை விமர்சித்து கருத்து வெளியிட்ட ஷாஹீன் தாதா என்ற இளம்பெண்ணும் அதற்கு விருப்பம் வெளியிட்ட அவரது தோழியும் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள் அடிப்படை பேச்சுரிமையை மீறுவதாலும் தவறாக பயன்படுத்தப்படுவதாலும் இப்பிரிவுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது. இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை’ என்றார்.

இதையடுத்து பேச்சுரிமையை பாதிக்காமல் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவது குறித்து குழு அமைத்து பரிந்துரைகளை அளிக்கும்படி மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். வழக்கின் அடுத்த விசாரணையின்போது, மத்திய அரசு விரிவான பதிலை தாக்கல் செய்ய உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x