Last Updated : 09 Feb, 2015 08:35 AM

 

Published : 09 Feb 2015 08:35 AM
Last Updated : 09 Feb 2015 08:35 AM

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்: நிதி ஆயோக் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதுடன் அதை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கான அதிகாரமும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

மத்திய திட்டக் குழுவை கலைத்து விட்டு அதற்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. பிரதமர் தலைமையிலான இந்த அமைப்பின் நிர்வாக கவுன்சில் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடை பெற்றது.

இதில் மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பு, மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல் படுவதற்கு உதவும். இதன்மூலம் நாட் டின் மிகப்பெரிய சவாலாக உள்ள வறுமையை ஒழிக்க முடியும்.

வறுமையிலிருந்து விடுபடவும் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும் தேவையான ஆலோசனைகளை வழங்கு வதற்காக தனித்தனியாக சிறப்பு பணிக் குழுக்களை மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும். முதலீடு மற்றும் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதிலும் வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மாநில அரசுகளுக்கு சுதந்திரம்

மாநில அரசுகளின் தேவைக்கேற்ப வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதுடன் அதை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கான அதிகாரமும் வழங்கப்படும்.

அதேநேரம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தாமதமாகி வருகின்றன. எனவே திட்டங்களின் செயல்பாட்டை பாதிக்கும் காரணிகளை முதல்வர்கள் கண்காணித்து அதற்கு தீர்வு காண வேண்டும். தாமதத்தைத் தவிர்ப் பதற்கு தனியாக ஒரு அதிகாரியை நியமிக்கலாம்.

அனைத்து மாநிலங்களும் சீராக வளர்ச்சி அடையாவிட்டால் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகாது. எனவே, நம் அனைவரின் வளர்ச்சிக்காக நாம் ஒன்றிணைவோம்.

இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

66 திட்டங்கள் மறுசீரமைப்பு

மத்திய அரசின் 66 திட்டங்களை மறுசீரமைப்பு செய்வது, திறன் மேம்பாடு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசனை வழங்குவதற்காக முதல்வர்களை உள்ளடக்கிய மூன்று குழுக்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, “வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, அதிகாரப் பரவல், திறன் மேம்பாடு, திட்டங்களின் செயல்பாட்டில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பது ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பிஹார் மாநிலத்தின் சார்பில் அதன் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி கலந்துகொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x