ஊதிய உயர்வு பேச்சு தோல்வி: பிப்.25-ம் தேதி முதல் 4 நாட்கள் வேலை நிறுத்தம் - வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு

ஊதிய உயர்வு பேச்சு தோல்வி: பிப்.25-ம் தேதி முதல் 4 நாட்கள் வேலை நிறுத்தம் - வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து வங்கி நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, திட்டமிட்டபடி வரும் 25 முதல் 28-ம் தேதி வரை 4 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் வேலை, புதிய மருத்துவ திட்டம் செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்திய வங்கிகள் சங்கம் ஊதிய உயர்வை 11 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது. மேலும், ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட வங்கி ஊழியர் சங்கம், வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்தது.

இந்நிலையில், மும்பையில் நேற்று இந்திய வங்கிகள் சங்கத்துடன், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஊதிய உயர்வை 12.5 சதவீதத்தில் இருந்து 13 சதவீத மாக உயர்த்தி தருவதாகக் கூறப்பட்டது. இதை ஊழியர் சங்கத்தினர் ஏற்க மறுத்த தால் பேச்சுவார்த்தை தோல்வி யடைந்தது.

இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் 25 முதல் 28-ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்திலும், மார்ச் 16-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தகவலை, வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் முரளி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in