Last Updated : 01 Feb, 2015 12:55 PM

 

Published : 01 Feb 2015 12:55 PM
Last Updated : 01 Feb 2015 12:55 PM

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக தாக்கல் செய்த மனுவுக்கு பவானி சிங் பதில் அளிக்க நோட்டீஸ்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க‌க் கோரி திமுக‌ தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு பவானி சிங் மற்றும் கர்நாடக, தமிழக அரசுகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

இதில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த 28-ம் தேதி மேல்முறையீட்டு மனு (ரிட்) தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் கே.எல்.மஞ்சுநாத், எஸ்.சுஜாதா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

பவானி சிங் பதிலளிக்க உத்தரவு

அப்போது திமுக தரப்பில் ஆஜரான கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், “சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறி ஞராக ஆஜராக பவானி சிங்குக்கு அதிகாரம் இல்லை.

இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றமோ, அரசோ எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அரசு வழக்கறிஞரை நியமிக்கும் உரிமை இல்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி மஞ்சுநாத், “இந்த மனு ஏற்கெனவே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட மனு தானே? இது தொடர்பாக பவானி சிங், கர்நாடக அரசு, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மனுவின் நகல் வழங்கப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு திமுக வழக்கறிஞர் நாகேஷ், “இல்லை” என்றார். இதை யடுத்து, திமுகவின் மனுவுக்கு வரும் திங்கள்கிழமை (பிப்.2) பதில் மனு தாக்கல் செய்யுமாறு பவானி சிங், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், கர்நாடக அரசின் சட்டத்துறை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x