

நாட்டில் 100 நாள் வேலைத் திட்டம் தொடரும் என்றும், அதற்கென வரும் நிதியாண்டில் ரூ.34,699 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-16 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.
ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் வேளாண் துறை அறிவிப்புகளை வெளியிட்டபோது, "தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட (MNREGA) ஒதுக்கீடு ரூ.34,699 கோடி ஆகும். இந்த வேலைத் திட்டம் மூலம் ஏழை மக்கள் பயனடைவர்.
முத்ரா வங்கிகள்:
தொழில் முனைவோருக்கு சிறு, குறு அளவில் கடன் வழங்கும் வகையில் முத்ரா வங்கிகள் உருவாக்கப்படும். அதற்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும்.
விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நபார்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.
வரும் நிதியாண்டின் வேளாண் கடன் இலக்கு ரூ.8.5 லட்சம் கோடி" என்றார் அருண் ஜேட்லி.