Last Updated : 24 Feb, 2015 08:25 PM

 

Published : 24 Feb 2015 08:25 PM
Last Updated : 24 Feb 2015 08:25 PM

குடும்பத்துக்குள் நிகழும் பாலியல் வன்முறைகள்: டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய கருத்து

குடும்பத்திற்குள்ளேயே நடக்கும் பாலியல் வன்முறைகள் சமூகத்தின் ஆழத்தில் ஊன்றிப்போன நோய் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

"ஒரு பெண்ணால் தன் குடும்பத்திற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்றால், அவளால் எங்குமே பாதுகாப்புடன் இருக்க முடியாது!” கர்ப்பமாய் இருந்த தன்னுடைய மருமகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, அவர் தற்கொலை செய்ய உடந்தையாக இருந்த 63 வயதான ஆணுக்கு, 10 வருட சிறைத்தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம் கூறிய வார்த்தைகள் இவை.

குடும்பத்திற்குள்ளாக நடக்கும் பாலியல் வன்முறைகள், சமூகத்தின் ஆழத்தில் ஊன்றிப்போன நோய்; குற்றமான இதை மற்ற குடும்ப உறுப்பினர்களே மறைக்க முயல்கின்றனர். இந்த மாதிரியான உறவுகள் என்றுமே பரஸ்பர சம்மதத்துடன் நடப்பதில்லை.

கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லா, சுல்தான்புரியைச் சேர்ந்த பாரத் சிங் ராவத்துக்கு, 24 வயதான அவரின் மருமகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி தூக்கில் தொங்கக் காரணமாக இருந்ததுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

“நம் சமூகக் கட்டமைப்பில் நிச்சயமாக ஏதோ பிரச்சனை இருக்கிறது. ஒரு பெண்ணால் தன் குடும்பத்திற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்றால், அவளால் எங்குமே பாதுகாப்புடன் இருக்க முடியாது. வேலையின் காரணமாய் வெளியூரிலும், இரவுப் பணிகளிலும் இருக்கும் தன் மகனுக்குப் பதிலாக, இளம் பெண்ணாய் இருக்கும் தன் கர்ப்பவதி மருமகளைப் பாதுகாக்கும் அரணாய் இல்லாமல், அந்த சூழ்நிலையையே ஒருவர் சாதகமாய் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தண்டனை மிகவும் எளிமையானதுதான். சம்பந்தப்பட்டவர் தன் தீய எண்ணங்களைக் கைவிட வேண்டும்; இல்லையெனில் சமூகம் தரும் அவமானங்களையும், கூறும் அவதூறுகளையும் சந்திக்க வேண்டும்” என்றும் நீதிபதி கூறினார்.

ரத்த சொந்தங்களுக்குள் மட்டுமல்லாது கணவன் வழிச் சொந்தங்களிலும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளில் இருக்கும் கடுமையான உண்மைகளை தங்களால் புறக்கணிக்க முடியாது.

குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் வன்முறைகள் நாலு சுவர்களுக்குள்ளேயே நடந்து முடிவதால் இவை மீதான வழக்குகளின் தீவிரத்தன்மை அதிகரிக்கப்பட வேண்டும்” எனவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

நீதிமன்றம், ராவத் தனது மருமகளின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்ததோடு இல்லாமல் அவரின் வயிற்றில் இருந்த குழந்தையையும் சிதைத்துள்ளார். தொடர்ந்து பெண்மையின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து அவரின் தற்கொலைக்கும் காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறியிருக்கிறது.

திருமணம் முடிந்த இரண்டு வருடங்களுக்குள்ளாகத் தன் புகுந்த வீட்டிலேயே தூக்கில் தொங்கியபடியே அந்தப் பெண் 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டார். பிரேத பரிசோதனையின் போது அவர் எழுதி வைத்திருந்த கடைசிக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x