Published : 10 Feb 2015 01:08 PM
Last Updated : 10 Feb 2015 01:08 PM

டெல்லி தேர்தலில் நேர்மையும், உண்மையும் வெற்றி பெற்றுள்ளன: கேஜ்ரிவால்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி நேர்மைக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், டெல்லி படேல் நகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்னர் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.

அவர் பேசியதாவது, "டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி நேர்மைக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி. எங்களுக்கு தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் டெல்லிவாசிகள் என்பதில் அனைவரும் பெருமை கொள்ளும் அளவுக்கு டெல்லியை மேம்படுத்துவோம். இத்தருணத்தில் எனது மனைவியை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவரது ஆதரவு இல்லையென்றால் என்னால் திறம்பட பணியாற்றியிருக்க முடியாது.

மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட வெற்றி சற்றே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. இவ்வேளையில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்" என கூறினார்.