Last Updated : 18 Feb, 2015 09:45 AM

 

Published : 18 Feb 2015 09:45 AM
Last Updated : 18 Feb 2015 09:45 AM

மேற்குவங்க மாநிலம் மால்டா முகாமில் பிஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர் பலி, 4 பேர் காயம்

மேற்குவங்க மாநிலம் மால்டா அருகே உள்ள எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) முகாமில் வீரர் ஒருவர் நேற்று துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் மால்டா பகுதிக்கான பிஎஸ்எப் டிஐஜி ராஜ் சிங் ரத்தோர் கூறியதாவது:

மால்டா அருகே ஃபரக்கா என்ற இடத்தில் 20-வது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்களில் வசந்த் சிங் (35) என்பவர் தூங்கிக் கொண்டிருந்த சக வீரர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் தலைமை காவலர் மூல்சந்த் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த 4 வீரர்கள் மால்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது உடலில் வசந்த் சிங்கின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. எதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய வசந்த் சிங்கை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x