Published : 16 Feb 2015 09:15 PM
Last Updated : 16 Feb 2015 09:15 PM
டெல்லியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு டெல்லி காவல்துறையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.
‘டெல்லி போலீஸ்’ தோற்றுவிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பங்கேற்று அணிவகுப்பு மரியாதை ஏற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதிய கட்சி மக்களின் தீர்ப்பை பெற்றுள்ளது. டெல்லியில் புதிய அரசும் அமைந்துள்ளது.
நகரின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில், புதிய அரசுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி உணர்வுடன் மாநிலங்களுக்கு கட்சிப் பாகுபாடின்டி அனைத்து உதவிகளும் அளிக்கவேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு எண்ணம்.
டெல்லி மக்களுக்காக மட்டும் இதை நான் கூறவில்லை. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பிரதமர் கவலைப்படும் நிலையில் இதை நான் உங்களுக்கு கூறுகிறேன்” என்றார்.
விழாவில் பங்கேற்கும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களை டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு நேற்று பணிகளைத் தொடங்கிய அமைச்சர்கள் எவரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களை ராஜ்நாத் சிங்கும், பாஸியும் கேட்டுக்கொண்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT