Published : 12 Feb 2015 05:43 PM
Last Updated : 12 Feb 2015 05:43 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சந்தித்த தோல்வியால், மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற 5-வது இந்திய - அமெரிக்க பொருளாதார மற்றும் நிதி உடன்பாடு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றியைக் கண்ட பாஜக, ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த மிக முக்கியமான தேர்தலில் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இந்த பின்னடைவால் மத்திய அரசின் செயல்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அருண் ஜேட்லி, "இதுவரை 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்றுள்ளோம். ஒன்றில் மட்டும் வெற்றி பெறவில்லை. இதனால் நாம் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுவிடும் என்று கருத முடியாது" என்றார்.
2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 28-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசில் தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை இது. இதில் வளர்ச்சியை மையப்படுத்திய பல சீர்திருத்த நடவடிக்கைகளும், மானிய குறைப்பு நடவடிக்கைகளும், சர்வதேச நாடுகளின் முதலீட்டு விவகாரங்களில் எளிமையைப் பின்பற்றுதல் போன்ற பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
புதிய முதலீட்டுக்கான வழிகள், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது, வறுமை ஒழிப்பு, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது போன்றவற்றுக்கு வழிவகுக்கும் பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அருண் ஜேட்லி கூறினார்.
நடந்த முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. மத்திய அமைச்சரவையில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடந்த ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜார்கண்ட் தேர்தல்களில் பாஜக வெற்றியைக் கண்டது. இதில் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் இரண்டாவது இடத்தை பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT