Last Updated : 27 Feb, 2015 02:38 PM

 

Published : 27 Feb 2015 02:38 PM
Last Updated : 27 Feb 2015 02:38 PM

ஜெ. வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக மனு: மார்ச் 9-க்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து பவானி சிங்கை நீக்க கோரும் திமுக மனு மீதான விசாரணையை வரும் மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு, "இந்த மனுவை நாங்கள் முழுமையாக ஆராயவில்லை. இந்நிலையில், எந்த ஒரு நிலைப்பாட்டையும் தெரிவிக்க விரும்பவில்லை. மனு மீதான விசாரணை மார்ச் 9-ல் நடைபெறும்" என்றனர்.

முன்னதாக, திமுக மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.பி.லோகூர், யு.யு.லலித் அமர்வு விசாரிப்பதாக இருந்தது. ஆனால் அந்த அமர்வில் இடம்பெற்றிருக்கும் ஒரு நீதிபதி ஏற்கெனவே ஜெயலலிதா வழக்கில் ஆஜராகியிருந்தார். அதனால், திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, திமுக மனு இன்று காலை நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், ஆர்.கே.அகர்வால் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

திமுக மனு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதால், அவர்கள் வெளியில் இருந்தபடி வழக்கை நடத்தி வருகின்றனர்.

மேல்முறையீட்டு வழக்கில் உதவி செய்ய முன்வந்த திமுக-வின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவில், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீடு விசாரணை முறையாக நடக்காததால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x