

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த பதில் வருமாறு:
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள், விசா காலத்தை தாண்டியும் தங்கியிருப்பவர்கள், எந்த ஆவணமும் இல்லாமல் வசித்து வருவோர் மற்றும் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களை அமெரிக்கா நாடு கடத்துகிறது.
2025-ல் நவம்பர் 21-ம் தேதி நிலவரப்படி, அமெரிக்காவில் இருந்து 3,155 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2024-ல் 1,368, 2023-ல் 617 ஆக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில், “2025, அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி குவைத் சிறைகளில் 316 இந்திய கைதிகள் உள்ளனர்” என்றார்.
மத்திய ஹஜ் கமிட்டியின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் சென்றவர்கள் எண்ணிக்கையை அமைச்சர் பகிர்ந்து கொண்டார். “நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2024-ல் 1,39.964 பேர், 2023-ல் 1,39,429 பேர், 2022-ல் 56,634 பேர் ஹஜ் புனிதப் பயணம் சென்றனர்’’ என்றார்.
2025-ம் நிதியாண்டில் வெளிநாடுகளில் 5 தூதரகங்கள் திறக்கப்பட்டன. ஈக்வெடாரில் குயிட்டோ, அமெரிக்காவில் பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், ரஷ்யாவில் கசான், யெகாடெரின்பர்க் ஆகிய நகரங்களில் இவை திறக்கப்பட்டதாக அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறினார்.