Published : 23 Feb 2015 02:35 PM
Last Updated : 23 Feb 2015 02:35 PM

வாட்ஸ்ஆப்-பில் தோழிகளுடனான படம்: மாணவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மங்களூரைச் சேர்ந்த இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் 3 பேர் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கல்லூரியில் தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

மாணவர்கள் தொடர்பான புகைப்படம் சனிக்கிழமை வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் முகமது ரியாஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் தந்தை அப்துர் ரகுமான் அளித்த புகாரை அடுத்து மர்ம நபர்களின் மீது ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைப் பெற்று வரும் மாணவர் முகமது ரியாஸிடம் 'தி இந்து' செய்தியாளர் தொடர்புகொண்டு பேசியபோது, "கல்லூரியில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சனிக்கழிமை வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டது. அதை யார் முதலில் பரப்பியது என்று தெரியவில்லை. இது குறித்து என்னிடம் கேட்பதற்காக புகைப்படத்தில் இடம்பெற்ற நண்பர்கள் (ரிதீஷ் மற்றும் வினித்) எனது வீட்டுக்கு ஞாயிறு காலை 11 மணிக்கு வந்தனர்.

அப்போது திடீரென எங்கள் வீட்டுக்கு 4 பேர் வந்து எங்களை இழுத்து காரில் ஏற்றிச் சென்றனர். காலியான மைதானத்துக்கு எங்களை அழைத்துs சென்றனர். அந்த இடத்துக்கு மேலும் 4 பேர் வந்தனர். அவர்கள் என்னிடம் நான் எந்த மதத்தைச் சேர்ந்தவன்? என்று கேட்டு அடிக்க தொடங்கினர்.எனது நண்பர்கள் இருவரையும் தாக்கினர்.

அவர்கள் தாக்கியதில் நான் மயங்கி இருந்தேன். தாகத்துக்காக தண்ணீர் கேட்டப்போது, அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி பீர் அருந்த வைத்தனர். பின்னர் எனது கண்களைக் கட்டி முக்கா தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் நிலையம் அருகே தூக்கி எரிந்துவிட்டனர். யாரோ தகவல் அளித்த நிலையில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடன் இருந்த ரிதீஷ் மற்றும் வினித் எங்கு இருக்கின்றனர் என்று தெரியவில்லை" என்றார்.

கடந்த பிப்ரவரி மாதம், இதேப் போல சூரத்க்கல் கடற்கரையில், இளைஞர் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 20 வயது மிக்க அந்த இளைஞர் ஒரு பெண்ணுடன் இருப்பதைக் கண்ட சிலர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x