Last Updated : 02 Apr, 2014 11:05 AM

 

Published : 02 Apr 2014 11:05 AM
Last Updated : 02 Apr 2014 11:05 AM

கர்நாடகத்தில் கட்சி தாவும் அரசியல் தலைவர்கள்!

தேர்தல் நாள் நெருங்க நெருங்க, கர்நாடகத்தில் கட்சித் தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொள்கை காரணமல்ல. சொந்தக் கட்சியில் சீட் கிடைக்காதது அல்லது வருங்கால அரசியல் ஆதாய கணக்குகளே இதற்கு காரணம்.

தேர்தல் ஆதாய கட்சித் தாவலை கர்நாடகத்தில் இம்முறை தொடங்கி வைத்தவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. தனது கர்நாடக ஜனதா கட்சியை கலைத்து விட்டு கடந்த டிசம்பரில் மீண்டும் பாஜகவில் இணைந்தார். இவரது கட்சி எம்எல்ஏ லக்ஷ்மி நாராயணா மற்றும் நிர்வாகிகள் பலர் காங்கிரஸில் இணைந்தனர்.

மாண்டியாவில் நடிகை ரம்யா வுக்கு எதிராகப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகை ரக்ஷிதா.

பாஜகவில் இணைந்த ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முதாலிக், கட்சி மேலிடத்தின் எதிர்ப்பால், ஐந்தே மணி நேரத்தில் நீக்கப்பட்டார்.

எடியூரப்பாவை போலவே பி.எஸ்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ராமுலு, மீண்டும் தனது தாய் கட்சியாக பாஜகவில் கடந்த மாதம் இணைந்தார். இதற்கு மாறாக இவரது ஆதரவாளரான முக்கிய மந்திரி சந்துரு காங்கிரஸில் இணைந்தார்.

சென்னப்பட்னா தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ யோகேஷ்வர் காங்கிரஸில் சேர்ந்தார்.

முன்னாள் முதல்வர் ஜே.எச். பட்டேலின் மகன் மஹிமா பட் டேலுக்கு காங்கிரஸ் சீட் தரவில்லை. இதனால் மதசார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார். இவருக்கு தாவணகெரே தொகுதியை ஒதுக்கினார் தேவகவுடா.

எடியூரப்பாவின் ஆதரவாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தனஞ்செய்குமாருக்கு பாஜக சீட் வழங்கவில்லை. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் ஐக்கியமான இவருக்கு, சிக்மகளூர்- உடுப்பி தொகுதியை வழங்கினார் தேவகவுடா.

இதுமட்டுமன்றி பெங்களூர் மத்திய தொகுதியை காங்கிரஸ் தர மறுத்ததால் அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் ஜாபர் ஷெரீப்புக்கும், பெங்களூர் வடக்கு தொகுதியை காங்கிரஸ் தர மறுத்ததால் அதிருப்தி அடைந்த முன்னாள் டிஜிபி சாங்கிலியானாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் தேவகவுடா.

கர்நாடகத்தில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க, இன்னும் எத்தனை தலைவர்கள் கட்சி மாறுவார்கள் எனத் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x