Last Updated : 06 Feb, 2015 12:25 PM

 

Published : 06 Feb 2015 12:25 PM
Last Updated : 06 Feb 2015 12:25 PM

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் சேர்க்கக் கோரிய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மனு தள்ளுபடி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களை 3-ம் தரப்பாக‌ சேர்க்கக்கோரிய‌ திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களை 3-ம் தரப்பாக‌ சேர்க்கக்கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த ஜனவரி 3-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், ''அரசு வழக்கறிஞரின் செயல் பாடுகள் ஆட்சேபத்துக்குரிய வகையில் இருந்ததால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எங்களை 3-ம் தரப்பாக சேர்த்துக் கொண்டது. எனவே, மேல்முறையீட்டிலும் அரசு வழக்கறிஞருக்கு உதவி யாகவும், எழுத்துப்பூர்வமாக இறுதிவாதம் தாக்கல் செய்யவும் அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

இதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார், ''குற்றவியல் நடைமுறை சட்டம் 301(2)-ம் பிரிவின்படி அரசு வழக்கறிஞர் மட்டுமே வாதிட முடியும்.திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் ஜெயலலிதாவுக்கு எதிரான அரசியல் கட்சியை சேர்ந்தவர். அவரது கோரிக்கையில் உள்நோக்கம் இருப்பதால் ஏற்கக்கூடாது''என்றார். மனு மீதான தீர்ப்பு வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு

இந்நிலையில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ''இவ்வழக்கின் ஆரம்ப நிலையில் இருந்து இன்று வரை அரசியல் தலையீடுகள் தொடர்ச்சியாக இருக்கிறது. முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அரசியல் அழுத்தங்களின் காரணமாகவே ராஜினாமா செய்துள்ளார். பொதுநலனுக்காக இணையாமல், தனது அரசியல் நலனுக்காக அன்பழகன் இவ்வழக்கில் இணைய முயற்சிக்கிறார். நீதிமன்றத்தில் அரசியல் தலையீடுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. திமுக தரப்பில் ப‌வானிசிங்கை நீக்க வேண்டும் என வழக்கு தொடுத்திருக்கும் நிலையில், அவருடன் எப்படி இவ்வழக்கில் உதவியாக இருக்க முடியும்? மேலும் திமுகவை வழக்கில் சேர்ப்பதை அரசு வழக்கறிஞர் விரும்பவில்லை. வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் திமுகவை இணைத்துக்கொள்வது சரியாக இருக்காது. எனவே திமுகவின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் திமுக மனு தள்ளுபடி ஆனதால் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீதிமன்ற வளாகத்தில் கர்நாடக மாநில அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x