பாமாயில் இறக்குமதி வழக்கு அச்சுதானந்தன் மனு தள்ளுபடி

பாமாயில் இறக்குமதி வழக்கு அச்சுதானந்தன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

பாமாயில் இறக்குமதி செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி மீது உச்ச நீதிமன்றத்தில் கேரள மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது அது மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்தது. இதனால் அரசுக்கு ரூ. 2.33 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருகிறது.

பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட காலத்தில் அன்றைய நிதியமைச்சராக உம்மன் சாண்டி இருந்தார். அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சி கூறி வருகிறது.

இதுகுறித்த விசாரணையில் உம்மன் சாண்டி குற்றமற்றவர் என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் இந்த வழக்கு தள்ளுபடியானது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "அரசியல் ஆதாயத்துக்காக எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அவற்றை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கைத் தொடரலாம்" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in