Published : 14 Feb 2015 11:08 AM
Last Updated : 14 Feb 2015 11:08 AM

காளஹஸ்தியில் சிவராத்திரி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நவக்கிரக கவசத்துடன் கூடிய வாயுலிங்கேஸ்வரர் தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில், ராஜேந்திர சோழன் கட்டியதாகும். மிகப்பழமையும், புகழும் கொண்டது இக்கோயில். தேவாரப் பாடல்களிலும், சங்க இலக்கியங்களிலும் இடம்பெற்ற திருத்தலமாகும். சோழ மன்னர்களும், விஜயநகர அரசர் கள் பலரும் இக்கோயிலுக்கு பல்வேறு நன்கொடைகள் அளித்துள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் குலோத்துங்க சோழன் இக்கோயிலில் உள்ள சிறு சிறு கோயில்களை கட்டியுள்ளான். 12-ம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் கோயிலை சுற்றிலும் மாட வீதிகளை அமைத்து, நான்கு புறமும் நான்கு கோபுரங்களை கட்டியுள்ளான்.

கி.பி 1516-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசரான ஸ்ரீகிருஷ்ண தேவராயர், இக்கோயிலில் பிரசித்தி பெற்ற நூறு கால் மண்டபத்தையும், தெற்கு வாயில் கோபுரத்தையும் நிறுவியதாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

திருஞான சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்திருக்கோயில், பக்த கண்ணப்பருக்கு முக்தி அளித்த திருத்தலமாகும். சிலந்தி, பாம்பு, யானை போன்றவைகளுக்கும் முக்தி அளித்ததால் இத்திருத்தலம் (ஸ்ரீ-சிலந்தி, காள-பாம்பு, ஹஸ்தி-யானை) ஸ்ரீ காளஹஸ்தி என பெயர் பெற்றது.

மூலவர் காளத்திநாதர் என்றும், உடனுறை ஞான பூங்கோதை தாயார் எனவும் அழகிய தமிழில் பக்தர்கள் அழைக்கின்றனர்.

இக்கோயிலில் ஆண்டு தோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா வெகு கோலாகலமாக நடத்துவது ஐதீகம்.

இவ்விழா நேற்று முன் தினம் பக்தனுக்கு முதல் மரியாதை அளிக்கும் வகையில், கோயிலின் அருகில் உள்ள பக்த கண்ணப்பர் கோயில் முன் பிரம்மோற்சவ கொடி முதலில் ஏற்றப்பட்டது. பின்னர், நேற்று மாலை காளத்திநாதர் கோயில் முன் உள்ள தங்கக் கொடி மரத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று இரவு வெள்ளி சப்பரத்தில் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உட்பட பல வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x