Published : 07 Feb 2015 10:12 AM
Last Updated : 07 Feb 2015 10:12 AM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெறும் என்று அதன் முதல்வர் வேட்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தலையொட்டி டெல்லியில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் கேஜ்ரிவால் நேற்று பிரார்த்தனை நடத்தினார்.
முதலில் ரகாப் கன்ஞ் குருத்வாராவுக்கு சென்ற அவர், அங்கிருந்து கன்னாட்பிளேஸில் உள்ள பழமையான அனுமார் கோயிலுக்கு சென்றார்.
பின்னர் டெல்லியில் உள்ள தூய இருதய தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அங்கிருந்து ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டுக்கு அருகேயுள்ள மசூதியில் தொழுகை நடத்தினார்.
டெல்லி தேர்தல் குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நான் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். நிச்சயமாக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கேஜ்ரிவால் வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை நடத்திய போது ஏராளமான பொதுமக்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT