Last Updated : 19 Feb, 2015 10:14 AM

 

Published : 19 Feb 2015 10:14 AM
Last Updated : 19 Feb 2015 10:14 AM

சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீடு: நீதிமன்றத்தில் தவறான தகவல்களை பதிவு செய்யக் கூடாது - நீதிபதி எச்சரிக்கை

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, நீதிமன்றத்தில் தவறான தகவல்களை பதிவு செய்யக் கூடாது. விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது எனவும் சுதாகரனின் வழக்கறிஞருக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 1991-96 கால கட்டத்தில் சுதாகரன், இள வரசியின் சொத்துப்பட்டியலை அவர்களது வழக்க‌றிஞர் சுதந்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் சுதாகரனின் மொத்த‌ சொத்து மதிப்பு ரூ. 2,12,47,978. இதில் கட்டிடம், நிலங்களின் மதிப்பு ரூ.1,84,73,019. இது தவிர அவரிடம் பணம் கையிருப்பு ரூ. 27,74,959 இருந்தது. இவை அனைத்துக்கும் போதிய வருமான ஆதாரம் இருந்தது. அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இந்த சொத்தையும், வருமானத்தையும் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தீர்களா? அங்கு இந்த கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதா?'' என்றார். அதற்கு சுதாகரனின் வழக்கறிஞர், ‘இல்லை’ என்றார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி “வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த கணக்குக்கு மாறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வ‌து ஏன்? என‌ கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி, “இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள சுதாகரன், இளவரசியின் சொத்துப் பட்டியலை விசாரணை நீதிமன் றத்தில் தாக்கல் செய்தீர்களா?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக் கறிஞர்கள்,'' வியாழக்கிழமை சுருக்கமான, தெளிவான சொத்துப் பட்டியல் தாக்கல் செய்வதாக கூறினர்.

எச்சரிக்கை

இதையடுத்து நீதிபதி, “இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துப் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களையே உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். இரு சொத்துப்பட்டியலும் வேறு வேறாக இருப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்தில் தவறான தகவல்களை பதிவு செய்யக்கூடாது. இவ்வாறு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது. இத்தகைய தவறான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டால், நானாகவே ஆவணங்களை படித்து தீர்ப்பு வழங்குவேன்''என எச்சரித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.​​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x