Published : 16 Jan 2015 07:13 PM
Last Updated : 16 Jan 2015 07:13 PM
பெட்ரோல் விலை ரூ.2.42-ம் டீசல் விலை ரூ.2.25-ம் குறைக்கப் பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைந்தது. அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் வரிவிதிப்புக்கு ஏற்ப விலை மாறுபடும்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.56 விலை குறைந் துள்ளது. அதன்படி ரூ.63.94 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.61.38-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.44 குறைந்துள்ளது. அதன்படி ரூ.53.78 ஆக இருந்த டீசல் ரூ.51.34-க்கு விற்கப்படுகிறது.
இந்த விலைகுறைப்பின் மூலம் ஆகஸ்ட் முதல் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69-ம் டீசல் விலை ரூ.10.71-ம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இப்போது வரை 8-வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 5-வது முறையாக குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைக் கப்பட்டது.
உற்பத்தி வரி உயர்வு
எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை சந்தித்த இழப்பை ஈடுகட்ட தற்போதைய சந்தை நிலவரத்தை மத்திய அரசு சாதக மாகப் பயன்படுத்தி வருகிறது. அதன்படி கச்சா எண்ணெய் விலை சரிவால் கிடைக்கும் லாபம், எண்ணெய் நிறுவனங்களுக்கு திருப்பிவிடப்படுகிறது.
இதற்காக கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
நேற்று காலை பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி தலா ரூ.2 உயர்த்தப்பட்டது. இந்த வரி உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் முதல் நான்காவது முறையாக கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பில் கட்டுப்பாடு
இப்போதைய சர்வதேச சந்தை நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல் விலை மேலும் ரூ.2 விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால் உற்பத்தி வரியை ரூ.2 உயர்த்தி விலை குறைப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. உற்பத்தி வரி 4 முறை உயர்த்தப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி யில் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதமாக குறைக்கும் இலக்கை எட்ட முடியும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT