Published : 29 Jan 2015 03:27 PM
Last Updated : 29 Jan 2015 03:27 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வழக்கமான அறிக்கைக்குப் பதிலாக தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிப்ரவரி 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், ஆம் ஆத்மி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக சார்பில் கிரண் பேடி, காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான் என மும்முனை போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்ட நிலையில், பாஜகவோ தேர்தல் அறிக்கை வெளியிடப்போவதில்லை என கூறியுள்ளது.
இது குறித்து டெல்லி பாஜக மூத்த தலைவர் ஆனந்த் குமார் கூறுகையில், "டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வழக்கமான தேர்தல் அறிக்கையை வெளியிடப்போவதில்லை. அதற்கு பதிலாக தொலைநோக்கு திட்ட அறிக்கையை வெளியிடவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அந்த அறிக்கையை வெளியிடுவார். ஜனவரி 31, பிப்ரவரி 1, 3, 4 தேதிகளில் டெல்லியில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்" என்றார்.
டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாதயா கூறுகையில், "பிப்ரவரி 6 வரை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தினசரி பாஜக சார்பில் 5 கேள்விகள் முன்வைக்கப்படும்" என்றார்.
முன்னதாக, கிரண் பேடி பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், தன்னுடம் பொது விவாதத்துக்கு அவர் தயாராக இருக்கிறாரா என கேஜ்ரிவால் சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT