Published : 13 Jan 2015 10:49 AM
Last Updated : 13 Jan 2015 10:49 AM
குவைத்தில் 64 இந்தியப் பெண் பணியாளர்கள் அரசு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். குவைத்தில் வெளிநாட்டுப் பெண் பணியாளர்களுக்காக அந்நாட்டு அரசு சார்பில் கடந்த டிசம்பர் 23-ம் முதல் சிறப்பு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கும் வசதியும் மருத்துவ சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பெண் பணியாளர்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்தில் இடர்பாடுகள் இருந்தால் இந்த விடுதிக்கு மாறிக்கொள்ளலாம். இதன்படி இங்குள்ள இந்தியத் தூதரகம் மூலம் இதுவரை 64 இந்தியப் பெண்கள் இந்த விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் தங்கும் வசதி தேவைப்படுவோர் இங்குள்ள இந்தியத் தூதரகத்தை பணி நாட்களில் நண்பகல் 12 மணி வரை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் கர்ப்பிணிப் பெண்களை குவைத் அரசு இந்த விடுதியில் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
குவைத்தில் வீட்டுப் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு, சமையல் பணி என பல்வேறு பணிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 லட்சம் பெண்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பிலிப்பின்ஸ், இந்தியா, இலங்கை, நேபாளம், எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய பெண்களும் தற்காலிகமாக இந்த விடுதியில் தங்கவைக்கப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT