Last Updated : 23 Jan, 2015 04:04 PM

 

Published : 23 Jan 2015 04:04 PM
Last Updated : 23 Jan 2015 04:04 PM

நாட்டின் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம்: முன்னாள் பிரதமர்கள் சிலர் மீது பரிக்கர் குற்றச்சாட்டு

நாட்டின் பாதுகாப்பு அம்சங்களில் முன்னாள் பிரதமர்கள் சிலர் சமரசம் கொள்ளும் வகையில் செயல்பட்டதாக, முன்னாள் பிரதமர்கள் சிலர் மீது பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் குற்றம்சாட்டினார். எனினும், அவர்களது பெயர்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்த இந்தக் கருத்து டெல்லி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது கருத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மும்பையில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், "பாதுகாப்பு விவகாரத்தில் தேசம் மிகப் பெரிய பணிகளை செய்துள்ளது. 20 அல்லது 30 ஆண்டுகள் பாடுபட்டு மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள்தான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆனால், முன்னாள் பிரதமர்கள் சிலர் இதில் சமரசம் செய்துகொண்டனர். அவர்களது பெயர்களை நான் வெளியிடப் போவதில்லை" என்றார்.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இந்திய எல்லைக்குள் சிறிய ரக கப்பல் ஊடுருவ முயற்சித்து, பின்னர் அதனை வெடிக்க செய்தது தொடர்பாக பேசும்போது இவ்வாறான கருத்தை பரிக்கர் தெரிவித்தார்.

ஆனால், இது தொடர்பான விவரங்கள் எதையும் வெளியிடாத அவர், 'சில தகவல்கள் அறியப்பட்டும் சமரசம் செய்து கொள்ளப்பட்டது' என்று மட்டும் கூறினார்.

இதனிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியை சேர்ந்த மணீஷ் திவாரி கூறும்போது, "எத்தகைய விவகாரத்தில் சமரசம் செய்யப்பட்டது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x